< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 Feb 2023 7:00 PM GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் உள்ள பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக வரமுடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-செந்தில்முருகன், பள்ளப்பட்டி.

மண் அள்ளுவது தடுக்கப்படுமா?

திண்டுக்கல்லை அடுத்த வெயிலடிச்சான்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டிகுளத்தில் லாரிகள் மண் அள்ளி செல்லப்படுகிறது. குளத்தில் அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குளத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், வெயிலடிச்சான்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

சின்னமனூரை அடுத்த சீலப்பாலக்கோட்டை கிராமத்தில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. இரவில் தனியாக செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. அதுமட்டுமின்றி பகலில் குழந்தைகள் கூட விளையாட முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. எனவே தெருநாய்கள் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், சீப்பாலக்கோட்டை.

சாக்கடை கால்வாய் சீரமைப்பு

போடி ஒன்றியம் ராகலாபுரம் 3-வது வார்டு இந்திராகாலனியில் சாக்கடை கால்வாய் வசதி சரியாக அமைக்கவில்லை. இதனால் கழிவுநீர் மேற்கு பகுதிக்கு வருவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், ராகலாபுரம்.

குடிநீர் வசதி

பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி 3-வது வார்டில் அமைந்துள்ள செம்மண்குளி பகுதி மக்கள் முறையாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

-துர்க்கைஈஸ்வரன், கீரனூர்.

தார்சாலை வசதி தேவை

சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டையில் ரேஷன்கடை முதல் காளியம்மன் கோவில் வரை சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாரல் மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே தார்சாலை அமைத்து தரவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வைரமுத்து, சீப்பாலக்கோட்டை.

பஸ்நிலையத்தில் விளக்கு வசதி

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கோபால்பட்டி டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியில் விளக்கு வசதி இல்லை. இரவில் பயணிகள் இருளில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. திருடர்கள் தொல்லை இருப்பதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே போதிய அளவில் விளக்கு வசதி செய்துதர வேண்டும்.

-ராஜேஷ்கண்ணன், திண்டுக்கல்.

சேதம் அடைந்த சாலை

நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை உருக்குலைந்து கற்கள் பரவி கிடக்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். பக்தர்கள், பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும்.

-முத்து, நிலக்கோட்டை.

மாணவ-மாணவிகள் தவிப்பு

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்கு செல்லும் ஜி.டி.என். சாலையை இருவழிப்பாதையாக மாற்றும் பணி பல மாதங்களாக நடக்கிறது. இதனால் தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைவுபடுத்த வேண்டும்.

-ராஜா, திண்டுக்கல்.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

போடி நகராட்சி 16-வது வார்டு பகுதியான மேலராஜ வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளன. அதனை முறையாக அகற்றாததால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கனகராஜ், போடி.

====

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்