< Back
மாநில செய்திகள்
குடும்ப பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை: பெண் தரகர் கைது
மாநில செய்திகள்

குடும்ப பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை: பெண் தரகர் கைது

தினத்தந்தி
|
5 Jan 2023 10:59 PM GMT

குடும்ப பெண்கள் இருவரை வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை நடந்துள்ளது. அந்த பெண்களை மீட்ட போலீசார், பெண் தரகர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை,

சென்னைக்கு குடும்ப பெண்களை வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து, அவர்களை அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அடைத்து வைத்து, அவர்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விபசார தடுப்பு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்களை மீட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, தங்களது கண்ணீர் கதையை போலீசாரிடம் விவரித்தனர். அவர்களுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து அவர்களை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து, வாடிக்கையாளர்களை எப்படி கவர்வது என்பது பற்றி, விபசார பயிற்சி கொடுத்தார்களாம். நல்ல வேலையில் இருப்பதாக, அந்த பெண்களை அவர்களது குடும்பத்தாருக்கு செல்போனில் பேச வைத்துள்ளனர். அந்த பெண்கள் இருவரையும் மீட்டு, போலீசார் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்களை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

பெண் தரகர் கைது

2 பெண்களையும் ஏமாற்றி விபசாரத்தில் தள்ளியதாக, திருவேற்காட்டைச் சேர்ந்த பெண் தரகர் சங்கீதா (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார். இன்னொரு முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்