< Back
மாநில செய்திகள்
விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்

தினத்தந்தி
|
9 Oct 2023 6:45 PM GMT

காவிரி ஆற்றில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் வராததால் மயிலாடுதறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி பயிர்கள் கருகியது. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கருகும் பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நடவு பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் நிலத்தடி நீரை கொண்டு நடவு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி 250-க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் சம்பா பயிர்கள் கருகி வருகின்றது.

சம்பா பயிர்கள் நட்டு ஒருமாதமாகியுள்ள நிலையைில் பயிர்கள் ஒரு அடி அளவிற்கு வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால் காவிரியில் தண்ணீர் வராததாலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாததாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனால் பம்பு செட்களில் தண்ணீர் அளவு குறைந்து உப்பு கரைசலாக வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொன்னூர் கிராமத்தை சேர்ந்த அகோரம் என்ற விவசாயி கூறுகையில், உமாரகம் சம்பா பயிரை 25 ஏக்கரில் நடவு செய்தேன். நடவு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் 25 ஏக்கரில் பயிர்கள் வளராமல் தரையோடு தரையாக கருகி உள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பயனில்லை. இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் வளராமல் கருகி வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்