< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்றபோது தகராறு: வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்றபோது தகராறு: வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

தினத்தந்தி
|
11 Jun 2023 9:32 AM GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்றபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் அரிச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இர்பான் (வயது 20). இவர் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்தபோது அவரிடம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை சேர்ந்த மூர்த்தி (26) கஞ்சா கேட்டார். அப்போது இர்பான் அதிக விலை கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதை கண்ட மூர்த்தியின் நண்பர்கள் 4 பேர் இர்பானை ரெயில் நிலையத்தில் ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டினர். இதில் இர்பானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை காப்பாற்ற சென்ற இர்பானின் நண்பர் தோசிப்க்கும் வெட்டு விழுந்தது.

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் இர்பானை கத்தியால் வெட்டிய மூர்த்தியை பிடித்தனர். அவரது நண்பர்கள் 4 பேரும் தப்பி ஓடினர். பின்னர் படுகாயம் அடைந்த இர்பான், தோசிப் ஆகிய இருவரையும் ரெயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூர்த்தியின் நண்பர்கள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்