< Back
தமிழக செய்திகள்
தொடர் மழை: வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
தமிழக செய்திகள்

தொடர் மழை: வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
3 Aug 2022 5:17 AM IST

தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மூல வைகை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றை கடக்கவோ, இறங்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி வந்தவுடன், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அனைத்து பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டத்தை 70 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

இதையொட்டி பாதுகாப்பு கருதி அணையில் இருந்து இன்று (புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே வைகை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்