< Back
மாநில செய்திகள்
ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
26 Jan 2023 7:37 PM GMT

மோகனூர் அருகே ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மோகனூர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில், பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூக மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில், மகா கணபதி, சப்தகன்னிமார், கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர். இக்கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை முன்னிட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 24-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். யானை, குதிரை, பசு உள்ளிட்டவை புடைசூழ 10 கி.மீ. தூரம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு, 2-ம் கால யாகசாலை பூஜையும், இரவு 10 மணிக்கு 33-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று அதிகாலை 4 மணிக்கு, புனித தீர்த்தம் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஸ்ரீ மகா கணபதி, சப்தகன்னிமார், முத்துசாமி, கருப்பண்ணசாமி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் சாமிகளுக்கு, மகா அபிஷகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கோபுர கும்பாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சாமிகளுக்கு, மகா அபிஷகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குடிப்பாட்டு மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர் பெரியசாமி தலைமையில் மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்கள், ஆரியூர் கிராம கொங்கு வேளாளர் வழிபாட்டு மக்கள் மன்றம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்