< Back
மாநில செய்திகள்
மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
19 Feb 2023 6:45 PM GMT

மத்திய அரசை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரசார் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .

நாகர்கோவில்,

மத்திய அரசை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரசார் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .

ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும். ஹைதராபாத் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். கோட்டார் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும். தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம் (கிழக்கு), பினுலால் சிங் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள்

எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட தலைவர்கள் டைசன் (கிழக்கு), திவாகர் (மேற்கு), நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவி மதன நிஷா, நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நான் (விஜய் வசந்த்) மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறேன்.

கோரிக்கைகள் புறக்கணிப்பு

ஆனால் இன்று வரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ெதாடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசிடம் ரெயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்கள் அளிப்பேன். அதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்