< Back
மாநில செய்திகள்
காங்கிரஸ் தலைவர் மர்மசாவு: கோவை சிபிசிஐடி போலீசார் நெல்லை வருகை
மாநில செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மர்மசாவு: கோவை சிபிசிஐடி போலீசார் நெல்லை வருகை

தினத்தந்தி
|
17 July 2024 8:28 PM GMT

காங்கிரஸ் தலைவர் மர்மசாவு குறித்து விசாரிப்பதற்காக கோவை மாவட்ட சிபிசிஐடி போலீசார் நெல்லை வந்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த மே மாதம் 4-ந்தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை கால்கள் கட்டப்பட்டு தீயில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் தனசிங் எழுதியிருந்த கடிதங்களைக் கைப்பற்றிய போலீசார், அதில் குறிப்பிட்டு இருந்த நபர்களிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் 60-க்கும் மேற்பட்டவர்கள் பல குழுக்களாக பிரிந்து தங்களின் விசாரணையை விரிவுப்படுத்தி பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த தோட்டம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். தடயவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் கோவையில் இருந்து சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சபிதா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் மேலும் ஒரு குழுவினர் நெல்லை வந்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்ட நபர்கள் சிலரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்து, அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள், ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த தோட்டத்துக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்