கிருஷ்ணகிரி
கர்நாடகத்திற்கு கடத்த முயன்றரேஷன் அரிசி, 2 வேன் பறிமுதல்
|கர்நாடகத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, 2 வேன் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று காலை பசவண்ணகோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குருவிநாயனப்பள்ளி சோதனை சாவடி அருகே குப்பம் சாலையில் வந்த வேனை மடக்கி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 24 சாக்கு மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த கங்கோஜி கொத்தூர் அடுத்த சின்னகொத்தூரை சேர்ந்த விஷால்ராஜ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கடலூர் மாவட்டம், பூச்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், பகல், 12 மணியளவில் தேன்கனிக்கோட்டை அடுத்த மதகொண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள தேவாலயம் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டி வந்த தேன்கனிக்கோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.