< Back
மாநில செய்திகள்
குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள்; பெற்றோரின் மரபணு மாதிரியை சேகரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாநில செய்திகள்

குழந்தைகள் மாயம் தொடர்பான புகார்கள்; பெற்றோரின் மரபணு மாதிரியை சேகரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தினத்தந்தி
|
9 Dec 2023 1:16 PM GMT

பெற்றோர்களின் மரபணு விபரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில் திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது.

அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்றபோது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023-ல் மனு அனுப்பினோம். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளைப் பின்பற்றவில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பில் இருந்துள்ளது. குழந்தைகள் மாயமானது தொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன.

குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும்போது உடனடியாக பெற்றோர்களின் மரபணு (டி.என்.ஏ.) விவரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும்போது குழந்தையின் டி.என்.ஏ.வுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டி.என்.ஏ. விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க முடியும்.

இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏ.டி.ஜி.பி.யும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஐகோர்ட்டு பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் எதிர் தரப்புக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், விசாரணையை முடித்து 3 மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்