< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Dec 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஈச்சன்விளை கிராமத்தில் இருந்து தொடங்கி பூஜபுரவிளை வரை தலக்குளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும், பாசி படர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மின்விளக்கு தேவை

பூதப்பாண்டியில் சர்.சி.பி. நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியின் அருகே சாலையோரத்தில் அமைந்துள்ள மின்கம்பத்தில் விளக்கு பொருத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய மின் விளக்குபொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

கதவு அமைக்க வேண்டும்

ஆற்றூர் சந்திப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயன்று வருகின்றனர். இந்த மையத்தின் கதவுகள் சேதமடைந்தது. தற்போது கதவுகளின்றி காணப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடனேயே அங்கு அனுப்புகின்றனர்.எனவே, குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையத்திற்கு புதிய கதவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்குமார், ஆற்றூர்.

போக்குவரத்து நெருக்கடி

நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் வரை செல்லும் மருத்துவக்கல்லூரி சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போது வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த சாலையில் நேசமணிநகரில் இருந்து அனந்தன்பாலம் வரை சிலர் கார், டெம்போக்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். இதனால், அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.சிவகுமார், கோட்டார்.

நாய்கள் தொல்லை

வடக்கு தாமரைகுளம் தெற்கு தெருவில் ஏராளமான நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், வடக்கு தாமரைகுளம்.

விபத்து அபாயம்

நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை மெயின் ரோட்டில் அருகே கழிவுநீர் ஓடையின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகள் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.

மேலும் செய்திகள்