ராமநாதபுரம்
தினத்தந்தி புகார் பெட்டி
|புகார் பெட்டி
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ராமநாதபுரம் நகராட்சி 1-வது வார்டு கோட்டைமேடு தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நடக்க பாதையின்றி பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகள் தேங்கிய கழிவுநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ராமநாதபுரம்.
சேதமடைந்த கட்டிடம்
ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம், மகளிர் உணவகம் செயல்படும் இடங்களில் கட்டிட மேற்கூரைகள் பழுதடைந்து வலுவிழந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. கூரையின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்து நிற்கிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
பள்ளியின் தரம் உயர்த்தப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடி ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் மேற்கொண்டு தங்கள் உயர்நிலைக்கல்வியை தொடர அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இஸ்ஸதீன், எக்ககுடி.
பொலிவிழந்த பஸ் நிலையம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பஸ் நிலையம் மராமத்து செய்யப்படாமல் பொலிவிழந்து உள்ளது. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் முகம்சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தை வண்ணம் தீட்டி மராமத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
டாக்டர்கள் பற்றாக்குறை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இதனால் இந்த ஆஸ்பத்தரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நேரதாமதத்தால் சிரமப்படுகிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளின் நலன்கருதி இந்த ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கவேண்டும்.
சீனிஜலாலுதீன், பெரியபட்டிணம்.