< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Aug 2022 4:04 PM GMT

புகார் பெட்டி

மின் கம்பம் மாற்றப்பட்டது

குருந்தன்கோடு அருகே சேனாப்பள்ளி சந்திப்பு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிபாகம் முறிந்து நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

குளத்தை தூர்வார வேண்டும்

மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட மூவர்புரத்தில் இலுப்பைக்குளம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.மகேஷ், மூவர்புரம்.

எரியாத மின்விளக்குகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் பறக்கை ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கருப்பன் தெருவில் அமைந்துள்ள 2 மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன், கோட்டார்.

உயர்கோபுர மின்விளக்கு தேவை

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து முருகன் குன்றம் வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலையில் முருகன்குன்றத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் திருப்பத்தில் மின்விளக்கு அமைக்கப்படாததால் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜெயலெட்சுமி, ஏழுசாட்டுபத்து.

சுகாதார சீர்கேடு

பேச்சிப்பாறை கோதையாறு இடது கரைக்கால்வாயில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. அதில் இறைச்சி கழிவுகள் போன்றவையும் வீசப்படுவதால் குலசேகரம் அருகே அரியாம்பகோடு மதகு பகுதியில் குப்பைகள் தேங்கி நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கால்வாயில் குளிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மதகு பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்தாஸ், குலசேகரம்.

சேதமடைந்த மின்கம்பம்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புண்ணார்குளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் வலதுபுறமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மேல் பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இந்த கம்பத்தில் உயர் மின்அழுத்த கம்பியும் இணைக்கப்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின், அழகப்பபுரம்.

மேலும் செய்திகள்