< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Aug 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

மரக்கிளையை அகற்ற வேண்டும்

மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் பகுதியை நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் கிளைகள் சர்வீஸ் சாலையையும் தாண்டி நான்கு வழிச்சாலை நோக்கி வளர்ந்து வருகிறது. இதனால், கனரக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், காற்றின் வேகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி மரக்கிளையை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

எரியாத மின்விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்குபட்ட உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த இடத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், நாகர்கோவில்.

சுகாதார சீர்கேடு

கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் சித்திவிநாயகர் கோவில் மேற்கு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் காலப்போக்கில் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

-மயூரி சீத்தாராமன், கொட்டாரம்.

விபத்து அபாயம்

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிக்கட்டிப்பொட்டல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்துதான் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆழ்துளை கிணற்று பக்கவாட்டில் மின் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றின் மின்இணைப்பை பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், மணிக்கட்டிப்பொட்டல்.

நடவடிக்கை தேவை

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையும், இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையின் பின்பகுதி மற்றும் நிழற்குடைக்கு வரும் படிக்கட்டுகளில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

சேதமடைந்த சாலை

திருவட்டாரில் இருந்து கொக்கொட்டு மூலை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பேரை, பிளாங்காலை பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சிரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன் கிஷோர், திருவட்டார்.

மேலும் செய்திகள்