< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதல் மோகம்: அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்...!
மாநில செய்திகள்

கள்ளக்காதல் மோகம்: அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்...!

தினத்தந்தி
|
10 Oct 2023 12:57 PM GMT

சென்னையில் இளைஞர் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் அண்ணியை அழைத்துக் கொண்டு ரெயிலில் ஏறி எஸ்கேப் ஆகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். இவருக்கு உள்ளூரில் பெண் கிடைக்காததால் கொல்கத்தாவில் இருந்த உறவினர் நந்தினியை வரவழைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் மணிகண்டன் - நந்தினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு, வேலைக்கு சென்றிருந்த நந்தினி வீடு திரும்பிய போது, தனது 2 வயது குழந்தை காணாமல் போயிருந்தது. மூத்த மகளிடம் கேட்ட பொழுது அப்பா கடைக்கு கூட்டிச் சென்றுள்ளதாக கூறவே, கடைக்குதான் சென்று உள்ளார்கள் திரும்பி வந்து விடுவார்கள் என நந்தினி நினைத்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கணவனும் குழந்தையும் திரும்ப வராததால் பதறிப்போன நந்தினி, அக்கம் பக்கம் முழுக்க தேடியுள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் மணிகண்டனின் சொந்த ஊரான வடலூரில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நந்தினி போன் செய்துள்ளார். அப்போது ஊரில் உள்ள மணிகண்டனின் உடன் பிறந்த அண்ணன் மனைவியான விஜியும் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. என்னடா இது, ஒரே நேரத்தில் அண்ணி மற்றும் கணவரை காணவில்லையே என்று யோசித்த நந்தினிக்கு தூக்கிவாரிப்போட்டது.

வேலை நிமித்தமாக அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்த மணிகண்டன், அண்ணனின் மனைவி விஜியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் எதற்கு மறைந்து மறைந்து வாழ வேண்டும். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

மணிகண்டன் தனது மனைவி நந்தினியையும், விஜி தனது கணவனையும் விட்டு பிரிந்து ஊரை விட்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மத்திய பிரதேசத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். இதனிடையே மணிகண்டன் தனது இரண்டாவது குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்ததால், போகும் போது குழந்தையையும் தூக்கிக்கொண்டு விஜியுடன் ரெயில் ஏறி ஓடிப்போய்விட்டாராம்.

இதை அறிந்த நந்தினி, கணவனையும், குழந்தையையும் மீட்டு தரக்கோரி ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 5 நாட்களாகியும் இதுவரை குழந்தை கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நந்தினி, மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளாராம் ஆனால் போலீசார் அலட்சியமாக பார்த்துவிட்டு குழந்தையை கண்டுபிடிப்பதில் காலதாமதம் செய்வதாக நந்தினி குற்றம்சாட்டி உள்ளார்.

அண்ணியுடன் ரெயில் ஏறி கொழுந்தன் ஓட்டம் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்