< Back
மாநில செய்திகள்
ஓய்வூதியர்களுக்கு அரசின் திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

ஓய்வூதியர்களுக்கு அரசின் திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினத்தந்தி
|
21 Oct 2022 6:45 PM GMT

ஓய்வூதியர்களுக்கு அரசின் திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியதார்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஓய்வூதியர்கள் வழங்கிய மனுக்களை பெற்றுகொண்டு கலெக்டர் பேசியதாவது:- தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்குரிய பலன்கள் எவ்வித காலதாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கான அரசின் திட்டங்கள் உரியகாலத்தில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திடவும், ஓய்வூதியதாரர்கள் முன் வைக்கும் கோரிக்கையான காப்பீட்டுத்திட்ட அட்டையினை காலதாமதமின்றி கிடைத்திட மருத்துவத்துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், மருத்துவ சிகிச்சைக்கான கட்டண நிலுவைத்தொகை பெறுவது காலதாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ளவும், ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்க செய்திடல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, அரசின் திட்டங்களின் பயன்களை ஓய்வூதியதாரர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சென்னை ஓய்வூதியதாரக இயக்கக இணை இயக்குனர் கமலநாதன், துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் கோபால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குப்புக்கண்ணன், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேசன் முதுநிலை மண்டல மேலாளர் வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்