< Back
மாநில செய்திகள்
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
மாநில செய்திகள்

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
18 Oct 2023 12:25 AM GMT

கள ஆய்வுக்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும், கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றார். அப்படி செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அலுவலகத்தின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாணவிக்கு அறிவுரை

இந்த ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 66 மையங்களில் 5 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தரமான உணவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும்; குடிநீர் வினியோகப் பணிகள், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த மாணவியிடம், புதுமைப் பெண் திட்டத்தின் கீழும் விண்ணப்பித்து பயனடையும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்