< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
17 Nov 2022 2:56 PM GMT

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

16.11.2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையிலடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும். மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதாகவும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது.

இது தொடர்பாகத் தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்கவும். தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்