< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 21, 22-ஆம் தேதிகளில் கள ஆய்வு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 21, 22-ஆம் தேதிகளில் கள ஆய்வு

தினத்தந்தி
|
18 Sep 2023 6:11 PM GMT

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 21, 22-ந் தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

அந்த வகையில் வரும் 21 மற்றும் 22-ந் தேதிகளில் சென்னை (மாநகராட்சி தவிர்த்து), செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்திற்கான களப் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படுகிறது. அதன்படி சென்னை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி இயக்குனர் கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கோபிதாஸ்;

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி, தனியார் பள்ளிகள் இணை இயக்குனர்கள் ஆனந்தி, ராமசாமி;

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் மூத்தோர் கல்வி இயக்குனர் பழனிசாமி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) ராஜேந்திரன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் ஸ்ரீதேவி;

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குனர் உமா, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) சசிகலா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் குழுவில் நியமிக்கப்படுகின்றனர். ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் களப்பணி செய்து, ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்