< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: நேரு உள் விளையாட்டு அரங்கில் முழுவீச்சில் பணிகள் தீவிரம்
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: நேரு உள் விளையாட்டு அரங்கில் முழுவீச்சில் பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
26 July 2022 10:59 PM GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்கவிழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முழுவீச்சில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒத்திகை நிகழ்ச்சியில் கலைஞர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

பிரமாண்ட மேடை தயார்

இதையொட்டி, தொடக்க விழாவுக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடையில் ஆங்காங்கே செஸ் காய்களின் அணிவகுப்புகளும் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமன்றி நேரு உள் விளையாட்டு அரங்கின் நுழைவுவாயிலும் செஸ் காய்களின் அணிவகுப்பு போல அழகான அலங்கார வளைவு வைக்கப்பட்டுள்ளது. அரங்கில் ஆங்காங்கே பிரமாண்ட செஸ் காய்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஒலிம்பியாட் போட்டி சின்னமான 'தம்பி' உருவ பொம்மைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன.

தொடக்க விழாவில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இதில் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி அவர்கள் ஒத்திகையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கும் பணியும் தொடங்க இருக்கிறது.

அதேபோல மாநகராட்சி சார்பிலும் அரங்கத்தை சுற்றிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்