ஒ.என்.டி.சி. நெட்வொர்க்கில் இணைந்த சென்னை மெட்ரோ - எளிதாக டிக்கெட் பெற நடவடிக்கை
|டிக்கெட் வாங்கும் செயல்முறையை எளிதாக்கவும், முழுமையான போக்குவரத்து அனுபவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் சேவை மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரெயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.
மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்கள் கியூ-ஆர் கோடு டிக்கெட், பயண அட்டைகள், வாட்ஸ்-ஆப் டிக்கெட், தனியார் பணப்பரிமாற்ற செயலிகள் உள்ளிட்டவை மூலம் கட்டண சலுகையுடன் டிக்கெட்டுகளைப் பெறும் வசதிகள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், ஒ.என்.டி.சி. (ONDC) என்ற டிஜிட்டல் விற்பனை தளத்தில் சென்னை மெட்ரோ இணைந்துள்ளது. இதன்மூலம் ஒ.என்.டி.சி.யில் உள்ள டிக்கெட் புக்கிங் செயலிகள் மூலமாகவே மெட்ரோ ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது டிக்கெட் வாங்கும் செயல்முறையை எளிதாக்குவது மட்டுமின்றி, முழுமையான போக்குவரத்து அனுபவத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பெருநகர போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர போக்குவரத்து நிறுவனங்களும் விரைவில் ஒ.என்.டி.சி. நெட்வொர்க்கில் இணைய வாய்ப்புள்ளதாக சென்னை மெட்ரொ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.