< Back
மாநில செய்திகள்
சென்னை மலர் கண்காட்சி; இறுதி நாளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
மாநில செய்திகள்

சென்னை மலர் கண்காட்சி; இறுதி நாளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
5 Jun 2022 12:14 PM GMT

இன்று இரவு 8 மணி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், மாணவர்களுக்கு ரூ.20-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு வரும் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். சென்னை மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் ஜூன் மூன்றாம் தேதி மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த மலர் கண்காட்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மலர் கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்று மலர் கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று இரவு 8 மணி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்