< Back
மாநில செய்திகள்
உத்தமர்கோவிலில் சித்திரை தேரோட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

உத்தமர்கோவிலில் சித்திரை தேரோட்டம்

தினத்தந்தி
|
4 May 2023 7:49 PM GMT

உத்தமர்கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற, 108 திருப்பதிகளில் ஒன்றான, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்ற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து புருஷோத்தம பெருமாள் தினமும் முறையே சூரியபிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்