< Back
மாநில செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
22 July 2023 6:45 PM GMT

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிஉற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிஉற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடி உற்சவம்

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி உற்சவ விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலையில் பெருமாள் ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு சிம்ம வாகனம், ஹனுமார் வாகனம், கருட சேவை, சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்ளில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

7-ம் திருநாள் அன்று இரவு தங்க பல்லக்கு வீதி உலா நிகழ்ச்சியும், 8-ம் திருநாள் இரவு குதிரை வாகனத்திலும், 9-ம் திருநாள் அன்ன வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருளினார்.

தேரோட்டம்

மாலை 5 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க கோவில் 4 ரத வீதிகள் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு பெருமாள் எழுந்தருளி ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்