தென்காசி
காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்
|தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மாசி மகப்பெருவிழா
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப்பெருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி தொடங்கியது.
தினமும் காலையிலும், இரவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் 9.35 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மேள தாளங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க பக்தர்களின் பக்தி கோஷத்துடன் தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி காலை 10.25 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் 10.50 மணிக்கு அம்மன் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த தேரும் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து, மதியம் 12 மணிக்கு நிலையத்தை அடைந்தது.
திரளான பக்தர்கள்
இந்த தேரோட்டத்தில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில் நீர் மோர் சேவை நடைபெற்றது. இதேபோன்று பல்வேறு அமைப்பினர் குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர்.
நகரீஸ்வரமுடையார் கோவில்
பண்பொழி அறம்வளர்த்தநாயகி சமேத நகரீஸ்வரமுடையார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி விதி உலாவும், இரவில் சப்பர பவனியும் நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மண்டகப்படித்தார்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.