< Back
மாநில செய்திகள்
குற்றாலத்தில் சாரல் திருவிழா; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலத்தில் சாரல் திருவிழா; அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தினத்தந்தி
|
5 Aug 2022 5:11 PM GMT

குற்றாலத்தில் சாரல் திருவிழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

குற்றாலத்தில் சாரல் திருவிழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சாரல் திருவிழா

குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சாரல் திருவிழா புதிய தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று கலைவாணர் கலையரங்கத்தில் தொடங்கியது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழகத்திற்கு பொற்காலம்

விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், "நான் இங்கு வரும்போது கார்மேகம் சூழ்ந்து சாரல் மழை பொழிந்து வரவேற்பது போல் உள்ளது. இந்த மாவட்டம் புதிய மாவட்டம். இங்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். முதல்-அமைச்சரின் முயற்சியால் பல்வேறு தொழில்கள் இங்கு தொடங்க முதலீடுகள் வந்துள்ளன. எனவே இது ஒரு நல்ல ஆட்சி. தமிழகத்திற்கு இது பொற்காலம்" என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "சில நேரங்களில் சாரல் மழை இருக்காது. தண்ணீர் வராமலேயே சாரல் விழா நடந்துள்ளது. தற்போது சாரல் களை கட்டி உள்ளது. ரம்மியமான சூழல் உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வரலாற்று சிறப்புமிக்க சித்திர சபை இங்கு உள்ளது. பராக்கிரம பாண்டியன் வானுயர கட்டிய ராஜகோபுரம் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைகுமார், செல்வப்பெருந்தகை, காந்திராஜன், சிந்தனைச்செல்வன், வேல்முருகன், ரூபி மனோகரன், ராஜா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தெய்வீகன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் சினிமா நகைச்சுவை நடிகர் சூரி, டி.வி. புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சி உள்பட பரதநாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

மேலும் செய்திகள்