< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்...! வெதர்மேன் தந்த எச்சரிக்கை
மாநில செய்திகள்

தமிழ்நாடு வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்...! வெதர்மேன் தந்த எச்சரிக்கை

தினத்தந்தி
|
14 Nov 2022 7:29 AM GMT

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

சென்னை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் லேசான மழைப்பொழிவு இருந்தது. அதன்பின்னர் மழை அளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தநிலையில் வங்க கடலில் கடந்த 10-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாக வலுப்பெற்றதால் அதி கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாதவகையில் 44 செ.மீ. மழை பதிவாகி, அந்த ஊரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களிலும் விடாது மழை கொட்டியது.

சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். முக்கியமாக உங்கள் வாகனங்களில் பனியை கூட நீங்கள் பார்க்க முடியும்.

பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு வாய்ப்பு குறைவுதான். குன்றத்தூர் தவிர மற்ற பகுதியில் கொஞ்சம் கஷ்டம்தான். தெற்கு தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். கொங்கு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் நம்மை தாக்க போகும் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம். ஆனால் அதை பற்றி முழுமையான அப்டேட்களை தெரிந்து கொள்ள இன்னும் நாட்கள் இருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்