< Back
மாநில செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
18 May 2024 12:49 AM GMT

தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 22-ந் தேதி (புதன்கிழமை) வரை மழை நீடிக்கும் என்றுவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

கோடை காலம் ஆரம்பிக்கும்போது, கோடை மழையும் ஆங்காங்கே பெய்யத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை சற்று தாமதமாகவே பெய்யத்தொடங்கியது. தாமதமாக பெய்தாலும், ஏதோ பருவ காலத்தில் பெய்யக்கூடிய மழை போல், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழை கொட்டி வருகிறது.கடந்த வாரத்தில் இயல்பைவிட 60 முதல் 80 சதவீதம் வரை கோடை மழை குறைந்திருந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அது தற்போது இயல்பைவிட 30 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இந்த மழை மேலும் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதவிர, இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

21-ந் தேதி நெல்லை, தென்காசி, தேனியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், 20-ந் தேதி நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த 'சிவப்பு' எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாறாக அங்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.வழக்கம் போல, கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையும், மிக கனமழை பெய்யும் இடங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்