< Back
மாநில செய்திகள்
காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் கடைசி முடிவு -அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மாநில செய்திகள்

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் கடைசி முடிவு -அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தினத்தந்தி
|
13 Sep 2023 11:12 PM GMT

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் கடைசி முடிவு என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், இன்னும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அது கர்நாடக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். கர்நாடக அரசு நமக்கு பதில் சொல்வதை விட காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு என்ன பதில் சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

அதன் பிறகு எங்களுக்கு இருக்கும் ஒரு கடைசி முடிவு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான். சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 21-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கர்நாடக அரசின் முடிவு தெளிவாக தெரிந்து விடும். பிறகு அந்த வழக்கில் இதனை இணைத்துக்கொண்டு எங்கள் வக்கீல்கள் பேசுவார்கள்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது பெரிய விஷயம் அல்ல. முதலில் 21-ந்தேதி வழக்கில் என்ன நிலைமை ஏற்படுகிறது என்பதை பார்த்துவிட்டு அதற்கு பிறகு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது குறித்து யோசிக்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டே குழு ஏற்படுத்தலாம்

இன்னும் சொல்லப்போனால் சுப்ரீம் கோர்ட்டே கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தலாம்.

சுப்ரீம் கோர்ட்டு என்பது கர்நாடக அரசுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும்தான். இந்த காவிரி பிரச்சினை எப்போது ஆரம்பித்ததோ அப்போதில் இருந்து இதே பிரச்சினைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் முதலில் காவிரி நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு நடுவர் மன்றத்திற்கு வாதாடி பெற்று வந்தோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்கக் கூடாது என்றார்கள். அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அதனை பெற்று வந்தோம்.

நிவாரணத்தை பெற்றுத்தருவோம்

அதன் பிறகு 'கெஜட்டில்' போடக்கூடாது என்றார்கள். 'கெஜட்டில்' போட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார்கள். எனவே ஒவ்வொரு அங்குலத்திற்கும் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை நாங்கள் சந்தித்து தமிழக மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொண்டுதான் வந்திருக்கிறோம். இனியும் பெறுவோம்.

கர்நாடக அரசுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு சென்றால் சட்ட ஆயுதத்தை விட்டு விடுகிறோம் என்று அர்த்தமாகும். தமிழக விவசாயிகள் பாதிக்காத வண்ணம் எத்தனை முயற்சியும் எடுத்து நிச்சயம் நிவாரணத்தை பெற்றுத்தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்