< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தினத்தந்தி
|
4 April 2024 8:48 PM IST

அமைச்சர் பொன்முடி உடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்க கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, இந்த விதிகளை மீறி, அமைச்சர் பொன்முடியின் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் என்பவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணி தொடர்பான இந்த விவகாரத்தை எப்படி பொது நல வழக்காக கருத முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்