நாமக்கல்
திருச்செங்கோட்டில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்கிய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
|எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள வேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அத்தியண்ணன் (வயது 55). லாரி டிரைவர். இவருடைய மகள் வசுமதி (24). பி.இ. பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வினோத் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் வசுமதியிடம் வரதட்சணை கேட்டு வினோத் தரப்பினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 25-ந் தேதி வசுமதியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த வசுமதி பெற்றோர் மகளை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்களாம். அங்கு மன உளைச்சலில் இருந்த வசுமதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை பெற்றோர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் வசுமதியின் கணவர் வினோத் மற்றும் அவருடைய பெற்றோர் சுப்பிரமணியம்- அமுதா, தங்கை காவியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.