< Back
மாநில செய்திகள்
பயனின்றி கிடக்கும் பழைய கட்டிடம் விடுதியாக மாறுமா?
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பயனின்றி கிடக்கும் பழைய கட்டிடம் விடுதியாக மாறுமா?

தினத்தந்தி
|
26 Jun 2023 8:15 PM GMT

வால்பாறை அரசு கல்லூரியின் பயனின்றி கிடக்கும் பழைய கட்டிடம் விடுதியாக மாறுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை அரசு கல்லூரியின் பயனின்றி கிடக்கும் பழைய கட்டிடம் விடுதியாக மாறுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

298 இடங்கள் நிரம்பின

வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பி.சி.ஏ., பி.எஸ்சி.(ஐ.டி.), பி.எஸ்சி.(கணினி அறிவியல்), பி.காம்., பி.காம்.(சி.ஏ.), பி.பி.ஏ., பி.ஏ.(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), பி.எஸ்சி.(கணிதம்) ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கின்றன. இதில் மொத்தம் 520 இடங்கள் உள்ளன. இதுவரை 298 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். அதில் 200 பேர் வெளியூரை சேர்ந்தவர்கள். ஆனால் கல்லூரியில் விடுதி வசதி இல்லை. இதனால் வாடகைக்கு வீடு எடுத்து கல்வியை தொடர வேண்டிய நிலையில் வெளியூர் மாணவ-மாணவிள் உள்ளனர். ஆனால் வாடகை வீடும் எளிதில் கிடைத்துவிடுவது இல்லை. இல்லையென்றால், வாடகை அதிகளவில் வசூலிக்கப்படுகிறது. இதனால் வெளியூர் மாணவ-மாணவிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

விடுதியாக மாற்ற வேண்டும்

இதுகுறித்து வெளியூர் மாணவ-மாணவிகள் கூறியதாவது:- வால்பாறை அருகே சிங்கோனா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பழைய கல்லூரி கட்டிடங்கள் பயனின்றி கிடப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்டிடங்களை விடுதியாக மாற்றி கொடுக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வெளியூரை சேர்ந்த நாங்கள் உள்ளூரில் வாடகை வீடு தேடி அலையும் நிலை தவிர்க்கப்படும். எங்களது பெற்ேறாரும் நிம்மதியாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்