< Back
மாநில செய்திகள்
ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
கரூர்
மாநில செய்திகள்

ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

தினத்தந்தி
|
1 Aug 2022 6:40 PM GMT

ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூரம்

கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு 3 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கர்ப்பிணிகள், சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பக்தர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் 5 வகை யான உணவு வழங்கப்பட்டது. முன்னதாக எல்லையம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நொய்யல்

திருக்காடுதுறையில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நஞ்சை புகழூர் கண்டியம்மன் கோவில், சேமங்கி, தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்