< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விசைப்படகு மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்

தினத்தந்தி
|
18 Jun 2023 8:34 PM GMT

தடைக்காலம் முடிந்து 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்:

தடைக்காலம் முடிந்து 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்துள்ளனர்.

தடைக்காலம்

தஞ்சைமாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளில் சுமார் 286 விசைப் படகுகள் இருந்தன. கஜா புயலில் படகுகள் சேதம் அடைந்ததால் தற்போது 146 படகுகள் தான் உள்ளன.

மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந்தேதி நிறைவடைந்த நிலையில் 63 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்

தடைக்காலத்தில் கொள்ளுக்காடு தொடங்கி புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, சேதுபாவாசத்திரம், காரங்குடா, மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன் மாதேவிபட்டினம் உள்பட 32 மீனவ கிராமங்களில் உள்ள 4,500 நாட்டுப்படகுகள் தடையின்றி தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

தடைக்காலம் முடிந்து 63 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர்.

மீனவர்கள் ஏமாற்றம்

மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்காமல் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மீன்கள் செய்த செலவுக்கு கூட கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், தடைகாலத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை படகுகளுக்கு மராமத்து செலவு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

முதல் நாள் என்பதால் குறைந்தது 300 லிட்டர் வரை டீசல் போடவேண்டி இருந்தது. சராசரியாக ரூ.40 ஆயிரம் வரை டீசல் செலவு, மீனவர்களுக்கு தினக்கூலி, தளவாடச் சாமான்கள் ஆயில், ஐஸ், உப்பு என ரூ. 5ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்குச் சென்றனர்.

நஷ்டம்

படகு ஒன்றிற்கு 200 கிலோ வரை இறால் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர். ஆனால் அவர்களுக்கு 50 முதல் 100 கிலோ வரை தான் இறால் சிக்கி உள்ளதால். மீனவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். அதிலும் இறால் ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறாலுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் ஒரு சில படகுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டமும் மற்ற படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்