< Back
மாநில செய்திகள்
விளையாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

விளையாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
10 Oct 2023 6:45 PM GMT

விளையாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி 14-ந் தேதி சிவகங்கையில் நடைபெற உள்ளது.

சைக்கிள் போட்டி

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 14-ந்தேதி காலை 6 மணியளவில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் என போட்டிகள் நடைபெற உள்ளது.

தகுதிகள்

சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த சைக்கிள்களை கொண்டு வரவேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளை கொண்ட சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள்கள் அனுமதிக்கப்படாது. மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும். ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகை, காசோலையாக வழங்கப்படும். இந்த போட்டி, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்படும். எனவே போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வருகின்ற 14-ந்தேதி காலை 6 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு வருகை தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்