< Back
மாநில செய்திகள்
கார்த்திகை மாத பிறப்பையொட்டி  மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
நாமக்கல்
மாநில செய்திகள்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்

தினத்தந்தி
|
17 Nov 2022 7:00 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கார்த்திகை மாதம்

கேரள மாநிலம் சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு பக்தர்களுக்கும் குருசாமி மாலையை அணிவித்தனர்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி, மணிமாலை அணிந்து கொண்டு தங்களின் விரதத்தை தொடங்கினர். மேலும் அவர்கள் கருப்பு, நீலம், காவி உள்ளிட்ட நிறங்களில் வேட்டி அணிந்திருந்தனர். இதன் காரணமாக நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.

மோகனூர்

அதேபோல் மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மோகனூர் அடுத்துள்ள எஸ்.வாழவந்தி சிங்கார பாறையில் உள்ள விநாயகர் சிவன் கோவிலில் குருசாமி ஒவ்வொரு பக்தர்களுக்கும் மாலையை அணிவித்தனர். பின்னர் அதிகாலை 5 மணி முதலே பக்தர்கள் புனித நீராடி, புதிய ஆடை அணிந்து கொண்டு, துளசி மாலை சாமி மேல் வைத்து, சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு விரதம் கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்