கரூர்
பெண்கள்-குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
|பெண்கள்-குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கரூர்,
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியின் வழிகாட்டுதலின்படியும் நேற்று கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் பஸ்நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜலிங்கம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல்முருகன், சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபராஜ், கரூர் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.