சிவகங்கை
விழிப்புணர்வு நிகழ்ச்சி
|காரைக்குடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். செட்டி நாடு பப்ளிக் பள்ளி சேர்மன் குமரேசன் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் பேசும் போது,
நமது தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அதிகமான சதுரங்க வீரர்களை மாவட்ட அளவில் உருவாக்க வேண்டும் என்பதாகும் என்றார். நிகழ்ச்சியில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.