< Back
மாநில செய்திகள்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சிபோலீசார் தடுத்து விசாரணை
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சிபோலீசார் தடுத்து விசாரணை

தினத்தந்தி
|
28 Aug 2023 7:45 PM GMT

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அருகே வன்னியகுளம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர் (வயது45). விவசாயி. இவர் தனது மனைவி தீபா (43), உறவினர்கள் சங்கர் (43), ஹேமாவதி (35) மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் கேனில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைகண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதையடுத்து சவுந்தர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சவுந்தர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு சொந்தமான பூர்வீக நிலம் வன்னியகுளத்தில் உள்ளது. எனக்கு கனிஷ்கா என்ற மகள் மட்டுமே உள்ளார். எனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். வேறு யாருக்கும் நிலத்தை விற்கக்கூடாது, எங்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டும் என்று எனது உறவினர்கள் பிரச்சினை செய்தனர்.

இந்த நிலையில், எனது நிலத்தை மற்றொரு உறவினரான இலக்கியம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிரையம் செய்து கொடுத்து விற்பனை செய்து கொடுக்க கேட்டுக் கொண்டேன். இதற்கிடையே முருகனிடம் நிலத்தை விற்று கொடுக்க பல தவணைகளாக ரூ.23 லட்சம் கொடுத்துள்ளேன். எனக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனது மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே முருகனிடம் இருந்து அந்த பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்