< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
7 Sep 2023 7:00 PM GMT

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள், பழங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோ பூஜையும், அஸ்வ பூஜை, சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன், சந்தனகாப்பு அலங்கார சேவையும், மகா தீபாரதனை நடந்தது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குருதி பூஜை

இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் மற்றும் மகாசக்தி வாய்ந்த குருதி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது குருதி தீர்த்தம் பின்னர் கோவில் வளாகத்தில் சாமி திருவதிகை விழா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்