< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்  மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலை போட்டி
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலை போட்டி

தினத்தந்தி
|
30 Sep 2023 7:51 AM GMT

ஈரோட்டில் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலை போட்டி நடக்கிறது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாக கொண்டு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. குழுவாக போட்டியில் பங்குபெற அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்ச போன், கிளாரினெட் போன்ற கருவியிசை போட்டியிலும் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரத நாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியன்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் 3 மணி நேரத்துக்குள் வரைய வேண்டும். மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்கள் www.artandculture.tn.gov.in என்ற கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் பெறலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்