< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்  - வெளிநாட்டு பெண் கைது
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது

தினத்தந்தி
|
16 Aug 2022 2:44 PM GMT

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த பெண்னை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது தான்சானியா நாட்டை சேர்ந்த அஸ்சுரா முஹம்மத் சஃபானி (வயது 49) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார்.

மேலும், அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்து இருந்த காலணியை ஆய்வு செய்த போது அதில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர்.

ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் மேத்தோ குயிலோன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த தான்சானியா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார். இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்