< Back
மாநில செய்திகள்
சொத்துகுவிப்பு வழக்கு: பொன்முடி சரணடைய இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
மாநில செய்திகள்

சொத்துகுவிப்பு வழக்கு: பொன்முடி சரணடைய இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
12 Jan 2024 9:38 AM GMT

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, பொன்முடி சார்பில் மூத்த வக்கீல் இ.சி.அகர்வலாவும், அவரது மனைவி விசாலாட்சி சார்பில் வக்கீல் புல்கித் தாரேவும் மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், வயதுமூப்பை கருத்தில் கொண்டு சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதில், பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்