< Back
மாநில செய்திகள்
தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இல்லாத டோல்கேட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்
மாநில செய்திகள்

தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இல்லாத டோல்கேட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

தினத்தந்தி
|
27 Aug 2022 2:02 PM GMT

தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இல்லாத டோல்கேட்டுக்கு, டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை - பட்டுக்கோட்டை இடையே 50 கிலோமீட்டர் தூரம் ஆகும். இதன் இடையே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை அல்லது தஞ்சைக்கு தான் வர வேண்டும்.

அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் பஸ் பயணங்களையே நாடுகின்றனர். தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பஸ் கட்டணம் 36 ரூபாய் ஆகும். ஆனால் 90 சதவீத அரசு பஸ்களில் 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது காப்பீடு மற்றும் சுங்கவரி என கூடுதலாக ஒன்பது ரூபாய் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், தனியார் மற்றும் அரசு பஸ்களில் கட்டணம் வெறும் 36 ரூபாய். ஆனால் கும்பகோணம் கோட்ட அரசு பஸ்களில் காப்பீடு மற்றும் சுங்கவரி என கூடுதலாக 9 ரூபாய் சேர்த்து ரூ.45 கட்டணம் வாங்குகின்றனர். ஆனால் தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் சுங்கசாவடியே கிடையாது.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலேயே சுங்கச்சாவடி கிடையாது. அப்படி இருக்கையில் பயணிகளை ஏமாற்றி இல்லாத சுங்கச்சாவடிக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் இது போன்று இல்லாத சுங்க ச்சாவடிக்கு கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் புலம்பி தவிக்கிறார்கள்.

இதனால் பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறதோ? என எண்ண தோன்றுகிறது. எனவே தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்