< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்: திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தற்கொலை

தினத்தந்தி
|
26 Aug 2022 3:24 PM GMT

நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி செண்பகம். இவர்களுக்கு விஜயபாஸ்கர் என்ற மகனும் ஒரு தங்கையும் உள்ளனர். விஜயபாஸ்கரின் சகோதரிக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜயபாஸ்கர் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். விஜயபாஸ்கரை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் அவ்வப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட விஜயபாஸ்கரின் தாய் செண்பகம் கடந்த 9-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு 16-ம் நாள் காரியம் நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் 1-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்ட விஜயபாஸ்கர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும், தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை பணமின்றி செய்யமுடியாமலும், தாய் இறந்து போன துக்கத்திலும் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த விஜயபாஸ்கர் (30) இன்று பிற்பகல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்த அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலு செட்டி சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விஜய பாஸ்கரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயபாஸ்கரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்