< Back
மாநில செய்திகள்
கார்பைட் கற்கள், எத்திலீன் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் - அதிகாரி, வியாபாரி கருத்து
சென்னை
மாநில செய்திகள்

கார்பைட் கற்கள், எத்திலீன் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் - அதிகாரி, வியாபாரி கருத்து

தினத்தந்தி
|
1 May 2023 12:29 PM GMT

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன.

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.

மருத்துவ குணம்

நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழச் சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண்டுபிடிக்கும் வழிமுறை

எப்படி ரசாயன கற்கள் பயன்படுத்தப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி (சென்னை) பி.சதீஷ்குமார் கூறியதாவது:-

கார்பைட் கற்கள் மற்றும் எத்திலீன் திரவ துளிகள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைப்பது பெருகி வருகிறது. இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன.

தொடர்ந்து இப்படிப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் அல்சர் நோய்களை தாண்டி, புற்றுநோய்க்கும் ஆளாக வாய்ப்புள்ளது. எனவே மாம்பழங்களை வாங்கும்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

புகை மூட்டும் பழக்கம்

மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்கும்போது, அடிப்பகுதியில் இருந்துதான் பழுக்கத் தொடங்கும். எனவே இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களின் காம்புப் பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. மேலும் அனைத்து பகுதிகளும் ஒரு சேர மஞ்சள் நிறத்திலும் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும். ஆனால் கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்து பகுதியும் பளீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இயற்கையாகப் பழுத்த ஒரு மாம்பழம் வீட்டில் இருந்தாலே அதன் மணம் காற்றில் கலந்து வீசும். ஆனால் செயற்கை முறையில் பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மணம் வீசாது.

மாம்பழத்தை நறுக்கும்போது பூ மாதிரி சதை கிழிந்தால் அது நல்ல பழம் ஆகும். நறநறவென்றோ, சதைப்பகுதியின் இறுதியில் வெள்ளை நிறத்திலோ இருந்தால் அது ரசாயனம் கொண்டு பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் ஆகும். நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மிதக்கும். கிராமப்புறங்களை போல நகர் பகுதிகளில் மாம்பழங்கள் பழுக்கவிடப்படும் புகை மூட்டும் பழக்கம் இல்லை. எனவே மக்கள் மாம்பழங்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை அரிசி டப்பாவில் போட்டுகூட பழுக்க விடலாம்.

2 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு

பொதுவாகவே மாம்பழங்கள் விளைச்சலின்போது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு வரும்போது எத்திலீன் திரவங்களும் தெளிக்கப்படுகின்றன. எனவே தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை சுமார் 1 முதல் 2 மணி நேரம் தண்ணீரில் போடலாம். முடிந்தவரை தோல் நீக்கி சாப்பிடலாம்.

மாம்பழங்கள் போல சப்போட்டா, பப்பாளி, அவகடோ பழங்களும் இதுபோல ரசாயான கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன. இது தடை செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடைக்காரர்களின் கடை உரிமம் ரத்து, நேரடி வழக்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறோம். மாதிரிகளில் ரசாயனம் இருப்பது கண்டறிந்தால் கிரிமினல் வழக்காக அது மாற்றப்படும். 4 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். இதுபோன்ற ரசாயனம் கொண்டு பழுக்கவிடும் நடவடிக்கைகளை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, 2 நாட்களுக்கு ஒருமுறை கோயம்பேடு மார்க்கெட் உள்பட நகரின் முக்கிய சந்தைகள், கடைவீதிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முற்றாக நீக்க நடவடிக்கை

ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க விடப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-

பெரியபாளையத்தை சேர்ந்த விவசாயி ஜனராயன்:-

முக்கனிகளில் முதல் கனியாக கருதப்படுவது மாம்பழம் ஆகும். மாம்பழம் என்றாலே சேலத்து மல்கோவா மாம்பழம் என்று கூறுவர். மாம்பழம் வைட்டமின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்தது ஆகும். மாம்பழங்களில் மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, ருமேனி, பெங்களூரா என பல்வேறு வகை பழங்கள் உள்ளது. இதனால் அவர்கள் உடல் வலுப்பெறும். இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், வியாபாரிகள் தங்களது லாப நோக்கத்திற்காக பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இதனால் மாம்பழங்களை சாப்பிடுபவர்கள் பிற்காலத்தில் நோய் பாதிப்பால் அவதியடைகின்றனர். எனவே, பொதுமக்கள் மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் வியாபாரிகள் லாபத்தை மட்டும் பார்க்காமல் பொதுமக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்காமல் இயற்கையாக பழுத்த பழங்களை விற்க வேண்டும்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

பூந்தமல்லியை சேர்ந்த அக்கீஸ்:-

முன்பெல்லாம் மரத்தில் இருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டு வந்தோம். காலப்போக்கில் கடைகளில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம். தற்போது வியாபார நோக்கத்திற்காக மக்களின் உயிரை பறிக்கும் வகையில் மாம்பழங்களை ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு இறுதியாக உயிர் இழப்பும் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக மாம்பழங்களை சிறுவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு உணவாக வாங்கி கொடுக்கும் பொருட்களே விஷமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி இது போன்ற சோதனைகள் செய்து பறிமுதல் செய்தாலும் நிரந்தரமாக இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் உயிரோடு விளையாடக்கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நோய் பாதிப்புகள்

பள்ளிப்பட்டை சேர்ந்த தாமு:-

சாதாரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் மாம்பழமாகும். இதன் சுவையானது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊற செய்து விடும். அதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. இப்படிப்பட்ட சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும் ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. அது ரசாயனங்களால் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள் தான். அந்தப் பிரச்சினைக்கு காரணம் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ரசாயனக்கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் வியாபாரிகள் மக்களுக்கு வினியோகிக்கின்றனர். கார் பைட் கற்கள் மற்றும் எதிலின் திரவ துளிகளைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பது இன்று சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர் வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. தொடர்ந்து இப்படிப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் நோய்களையும் தாண்டி புற்றுநோய்க்கும் ஆளாக வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வியாபார நோக்கம்

திருவள்ளூரை சேர்ந்த ஐசக் :-

இன்றைக்கு இயற்கையாகவே எந்த பழத்தையும் நாம் சாப்பிட முடியவில்லை. சாதாரணமாக கிடைத்துக்கொண்டிருந்த வாழை, பப்பாளி, மாம்பழம் எல்லாம் செயற்கை முறையில் பழுக்க வைத்து மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வியாபார நோக்குடன் இவைகள் செய்யப்படுகிறது. பழங்கள் இயற்கையாக பழுப்பதற்கு முன்பாகவே அவைகளை அறுத்து செயற்கை ரசாயனங்களை தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். செயற்கையாக பழுக்க வைக்கும் பழங்கள் நீண்ட நாட்களுக்கு வைத்து வியாபாரம் செய்யும் நோக்கத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்து வியாபாரம் செய்கின்றனர். ஆனால் இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைத்தால் சில தினங்களில் கெட்டு விடும்.

ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் குழந்தைகள், பெண்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. நாம் பழங்களை சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும் பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்