< Back
மாநில செய்திகள்
சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
மாநில செய்திகள்

சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

தினத்தந்தி
|
11 May 2024 1:04 PM GMT

விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாகப்பட்டினம் சிபிசிஎல் எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும், அந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என நிலத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் சார்பாக எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நிலம் கையகப்படுத்துவதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்