< Back
மாநில செய்திகள்
தளி அருகேமுதியவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தளி அருகேமுதியவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 Jan 2023 6:45 PM GMT

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பி.லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பசவகவுடு மகன் சிவபசவண்ணா (வயது 63). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் சிவபசவண்ணா மகன் கணேசா (24) புகார் கொடுத்ததன்பேரில் போலீசார் சிவபசவண்ணாவை தேடினர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் சிவபசவண்ணா பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பசவகவுடுவின் 2-வது மனைவியின் மகன் சம்பத்குமார் (48), அவரது மகன் பிரதாப்குமார் என்ற மஞ்சு (23) மற்றும் நண்பர்கள் தாவரகரை கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (40), நாகப்பா என்ற நாகா ஆகியோர் சேர்ந்து சொத்து தகராறில் கடத்தி கொலை செய்து ஏரியூர் பகுதியில் உள்ள ஆற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குபேந்திரன், நாகப்பா (எ) நாகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கை தளி போலீஸ் நிலையத்துக்கு ஏரியூர் போலீசார் மாற்றினர்.

இந்த நிலையில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் தலைமறைவாக இருந்த சம்பத்குமார், அவரது மகன் பிரதாப்குமார் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். சம்பத்குமாரின் மனைவி மல்லேசம்மா படிகனாளம் ஊராட்சி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்