< Back
மாநில செய்திகள்
வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு
மாநில செய்திகள்

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு

தினத்தந்தி
|
6 Jun 2023 8:52 PM GMT

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை நடமாட்டம் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.

நாகர்கோவில்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

ஆனால் அரிக்கொம்பன் யானையானது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் மக்கள் நிறைந்த பகுதிக்கு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்பம் நகருக்குள்ளும் அரிக்கொம்பன் யானை வலம் வரத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ரப்பர் தோட்டங்கள்

இதைத் தொடர்ந்து ஒரு வார போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடித்தனர். அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக யானையை லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அப்பர் கோதையாறில் முத்துக்குழிவயல் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது. எனவே, அந்த பகுதியில் விடப்பட்ட யானை குமரி வனப்பகுதிக்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மலை பகுதியில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் மற்றும் கிராம்பு தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் தொழிலாளர்கள் குடில் அமைத்து தங்கி உள்ளனர். மேலும் காணி இன மக்களும் மலை பகுதியில் தான் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் அரிக்கொம்பன் யானை அப்பர் கோதையாறில் இருந்து கீழே இறங்கினால் பேச்சிப்பாறை வனப்பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரிக்கொம்பன் யானை தங்கள் பகுதிக்கு வந்துவிடுமோ? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

30 நிமிடங்களுக்கு ஒரு முறை...

அரிக்கொம்பன் யானை விடப்பட்ட அப்பர் கோதையாறு பகுதி குமரி மாவட்ட வனப்பகுதியில் வராது. யானையை பராமரித்து இறக்கிவிட்ட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்னும் அந்த பகுதியில் தான் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

அரிக்கொம்பன் யானையானது எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குமரி மாவட்ட வனபகுதிக்குள் வரலாம் அல்லது கேரள வன பகுதிக்குள்ளும் செல்லலாம். குமரி மாவட்ட வன பகுதியும், கேரள வன பகுதியும் இணைந்து இருப்பதால் பெரும்பாலும் அரிக்கொம்பன் யானை காட்டை விட்டு வெளியே வரவாய்ப்பு இல்லை. யானை விடப்பட்ட பகுதியில் குற்றியாறு அணை இருப்பதால் தண்ணீருக்காகவும் யானை வெளியே வர வாய்ப்பு இல்லை. மேலும் யானையின் கழுத்தில் கருவி ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவி யானையின் இருப்பிடத்தை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

அச்சம் தேவையில்லை

எனவே, யானை மக்கள் வசிக்கும் இடத்துக்கு வருவது தெரிந்தால் முன்கூட்டியே தகவல் கிடைத்து விடும். ஆனால் கருவி அனுப்பும் சிக்னலை பதிவு செய்யும் வசதி அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் உள்ளது. அந்த சிக்னல் கிடைக்கும் வசதியை குமரி மாவட்ட வன அலுவலகத்துக்கும் தருமாறு கேட்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்