< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?

தினத்தந்தி
|
17 July 2024 12:02 AM GMT

வெளிச்சந்தையில் அதிக விலை காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு வினியோகத் திட்ட பொருட்களாக பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு தமிழக அரசு வினியோகித்து வருகிறது.

அதன்படி, கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு அரசு ஒரு கிலோ பருப்பை 50 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.30-க்கு வழங்கியது.

அது போல, பாமாயிலை ரூ.45-க்கு வாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.25-க்கு வழங்கியது. தற்போது, வெளிச்சந்தையில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது. தற்போது இந்த மானியத்தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போது பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது.

எனவே, ரேஷனில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதாகவும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சில மாதங்களில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்